நேர்மறை வாழ்க்கை – Positive Life

ஒரு அமைதியான குளத்தின் மேற்பரப்பை சலனப்படுத்த ஒரு சிறிய கல் போதுமானது. அலை அலையாய் பரவும் சலனங்களில் அந்த நீர் நிலையில் வாழும் அத்தனை உயிர்களும் பதறி எழும். ஒரு சீரான, அமைதியான வாழ்வியக்கம் சில கணங்களேனும் தடம் மாறும். ஆனால் இயற்கையின் பேராற்றலால், இந்த சலனங்கள் உடனே அடங்கி வாழ்வின் இயல்பு நிலை திரும்புகிறது.

நம் மனதின் ஆற்றலும் இந்த நீர் நிலையை போலவே சலனம் கொள்ளும் தருணங்களில், நம் வாழ்க்கையின், ஆற்றலின் இயல்பான ஓட்டமும் தடம் மாறுகிறது. ஆனால் அந்த நீர் நிலையின் இயல்பை போல, நம் வாழ்வின் இயல்பு நிலை திரும்புவதில்லை. இந்த சலனங்கள் பல்கி பெருகி, எண்ணங்களாக, கருத்துகளாக, நினைவுகளாக வடிவங்கள் கொண்டு நம் வாழ்க்கையை நிரந்தரமாக தடம் மாற்றுகின்றன.

சமூக ஊடகங்கள், மனித குல வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் தன் கருத்தை மிக சுதந்திரமாக வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய வெளியை உருவாக்கி தந்திருக்கின்றன.இதுவே மனித குலத்திற்கு ஒரு பேராபத்தாக உருவெடுத்து நிற்கிறது. சமூக ஊடகங்கள் நாம் நமது கருத்துகளை வெளிப்படுத்தும் கருவி என்பதிலிருந்து பரிணமித்து, அவை நமது எண்ணங்களை, கருத்துகளை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன.சமூகத்தின் கூட்டு உணர்வுகளை அவை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் சார்ந்து, கலை இலக்கியம் சார்ந்து, அறிவியல் சார்ந்து, மதம் சார்ந்து சமூக ஊடகங்கள் இன்று உருவாக்கும் இந்த கூட்டு உணர்வுகள், மிக பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களாகவும், வெறுப்பு உணர்வுகளின் மேல் கட்டமைக்கப்பட்ட கருத்துகளாகவும் இருப்பது மனித குலத்திற்கே பேராபத்தாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறும் பொழுது போக்கு ஊடகமாக இருந்தவை, இப்பொழுது நமது எண்ணங்களை, நமது வாழ்வியல் முறைகளை தீர்மாணம் செய்பவையாக இருக்கின்றன. நம்மை அறியாமலேயே நம்மை அவை ஆட்கொண்டு விட்டன.

கருத்து பரிமாற்றம் என்பது பெரும்பாலும் தனி மனித தாக்குதல்களாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு அரசியல் கருத்தையோ, மதத்தின் கோட்பாடுகளையோ பற்றிக் கொண்டு அதன் வழியாகவே உலகத்தை பார்ப்பது எப்பொழுதும் உண்மையை காண உதவாது. ஏனெனில், உண்மை என்பதற்கு எப்பொழுதும் ஒரு பக்கம் மட்டுமே இருப்பதில்லை. அது பல பரிமாணங்கள் கொண்டது. நாம் அதனை புரிந்து கொள்ளும் தோறும் மாறக் கூடியது. அதனால் எப்பொழுதும் ஒரே கருத்தையே பற்றிக் கொண்டது வாதிடுவது, நம்மை மேலும் மேலும் அறியாமைக்கே இட்டு செல்கிறது. ஆனால் நாம் அவ்வாறு சிந்திக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நமது கல்வி முறையும், மதங்களும் அவ்வாறு இந்த உலகத்தை காணவே நம்மை பயிற்சி செய்திருக்கின்றன.

இந்த இருண்ட பக்கத்திலிருந்து, எதிர்மறை சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நாம் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான, ஒரு நிறைவான மகிழ்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான ஆரம்பம்.எதிர்மறை சிந்தனைகளை நாம் கூர்ந்து நோக்காமல் அவற்றை தாண்டி வர முடியாது. அவற்றின் ஊற்றுமுகத்தை ஆராய்வது மிக அவசியம். உலகின் பெருமதங்கள் அவற்றின் மீதே கட்டப்பட்டுள்ளன. அவற்றை எதிர்த்து உருவாகி வந்த எதிர் சிந்தனைகளான கம்யூனிஸம், மார்க்ஸிசம் போன்ற அரசியல் சிந்தாந்தங்களும் இந்த மதங்களுக்கான எதிர்வினையே.

நேர்மறை எண்ணங்களோடு வாழ பழகுவது இன்றைய கால சூழலில் சிறிது கடினமெனினும், நம்மை சுற்றியுள்ள நேர்மறை எண்ணங்களை நாம் தேடி கண்டடைந்தால், அவ்வாறு வாழும் மனிதர்களை, அவர்களது வாழ்வின் கூறுகளை நாம் புரிந்து கொண்டால் இது சாத்தியமே.

அந்த வகையில் Tristan Harris -ன் https://www.humanetech.com/ ஒரு சரியான முன்னெடுப்பு. சமூக ஊடகங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள மிக சரியான ஒரு முன்னெடுப்பாக இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இதனை தாண்டி, காந்தி என்ற ஒற்றை மனிதர் ஒரு பிரம்மாண்டமான புள்ளி. அரசியல், மதம், சமூகம் என நமது சிந்தனைகளை புரிந்து கொள்ள, இந்த அசாத்தியமான மனிதரின் வாழ்க்கை ஒரு மகத்தான ஆன்ம விடுதலைக்கான சாவி.

தன்னறம் நூல்வெளியின் அச்சில் வெளிவந்திருக்கும் தத்துவத்தில் கணிதல், நித்ய சைதன்ய யதியின் பல்வேறு உரைகளின் தொகுப்பு. கல்லெழும் விதை என்ற அந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழவின் காணொலி இது. எதிர்மறை எண்ணங்கள் பல்கி பெருகி பேருரு கொண்டு வளர்ந்து நிற்கும் சூழலில், நேர்மறை எண்ணங்களால் நமது வாழ்வை நிறைவு செய்து கொள்ள நித்ய சைதன்ய யதியின் இந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை.

நம்மை சுற்றி நேர்மறை எண்ணங்களும், சிந்தனைகளும், வாழ்வியலும் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை உணர்ந்து, நேர்மறை எண்ணங்களால் நமது வாழ்வை நிறைவு செய்வோம்.

அதிகார கொலைகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பையொட்டியும், சாத்தான்குளம் சிறை இரட்டை மரணங்களையொட்டியும் மைய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல தளங்களில் விவாதங்களும், கருத்து பகிர்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னதில் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்களுக்குள்ளேயே வாத பிரதிவாதிகள். பின்னதில் மக்களுக்குள்ளே பிரிவினை இல்லாத ஒற்றை கருத்து. அதிகாரத்திற்கு எதிரான ஒற்றைக் கோபம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சனைகள் அல்ல. நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன், ஒரு சமூகத்தின் நிகழ்வென்பது, அந்த சமூகத்தின் பொது மன நிலை வெளிப்பாடே. இங்கு நடைபெறும் நிகழ்வுகளை நம்மிலிருந்து விலக்கி நாம் அவதானிப்பது, ஒரு வகையில் அறப்பிழையே.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்குமான ஒற்றை சரடு, அதிகாரம். நம்முடைய சமூகம் எப்பொழுதுமே படி நிலைகளை வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கி கொண்டே வந்திருக்கிறது.நாம் படி நிலைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. சமூக சமத்துவம், சமூக நீதி என்பதெல்லாம் இங்கு அதிராமும், பொருளும் கொண்டவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

நம்முடைய அடிப்படை மன நிலை துதி பாடும் மன நிலை. புறநானூறின் பல பாடல்கள் வெறும் போற்றிப் பாடல்களே. புரவலர்கள் பொருள் வேண்டி, தம்முடைய அரசனை களிறென்றும், வேங்கையென்றும், மழையென்றும் இன்னும் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவில் துதி பாடி பரிசு பெறுகின்றனர். உலகில் வேறெங்கும் இந்த துதி இலக்கியம் இருந்ததா என தெரியவில்லை. இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகள் தொடங்கி நாம் இன்னொரு மனிதனை, அதுவும் அதிகாரத்தில் இருக்கும் மனிதனை துதி பாடும் கலையில் தேர்ந்து கொண்டே இருக்கிறோம். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தெடுத்த பெருமையை கோரும் திராவிட இயக்கங்கள் கூட ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தை புகழ்ந்து துதி பாடும் வழக்கத்தை மாற்றவில்லை.அது ஒரு படி மேலே சென்று, இந்த வழக்கத்தை உறுதி தான் செய்தது. சாமானியர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என்ற மூன்று படி நிலையை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சி மக்களின் மனதில் விதைத்து, நீர் ஊற்றி வளர்த்தெடுத்திருக்கிறது. இன்று ஒரு சாமானியனின் புகார் காவல் நிலையங்களில் குறைந்த பட்சம் ஒரு கவுன்சிலரின் சிபாரிசின்றி சரியாக விசாரிக்கப்படாது. கண்ணறிந்து கொலை செய்தவனாகினும், அவன் அரசியல் அதிகாரம் பெற்றவனாகி விட்டால், நம் வீட்டு திருமணத்திற்கு வரவேற்பு தட்டிகள் வைத்து அவனை வரவேற்று உபசரிப்பது நம் வழக்கம்.

நம் சமூகத்தின் படி நிலைகள் சாதியாலும், அதிகாரத்தாலும், பொருள் வசதி நிலையாலும், பாலியலாலும் கட்டப்பட்டது. உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, சாமானியன்-அரசு அதிகாரி, ஏழை-பணக்காரன், ஆண்-பெண் என எப்போதும் எதிரெதிர் துருவங்களை கொண்டே நம் சமுகத்தை நாம் உருவாக்குகிறோம்.இவையெல்லாம் நாம் அன்றாட வாழ்வில் நம்மை பொருத்திக் கொள்ளும் அடையாளங்கள். சில இடங்களில் நாம் அடக்கும் நிலையில் இருப்போம். சில இடங்களில் நாம் அடங்கும் நிலையில் இருப்போம். உண்மையில் அடக்குதலை நாம் இரகசியமாக, மனதின் ஆழத்தில் ரசிக்கிறோம்.

இங்கு 3000-க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதிக்கு மேலும், மற்றுமொரு சாதிக்கு கீழும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஏணியின் படிகளைப் போல. நாம் எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் நம் சாதியின் மேன்மைகளை ரசிக்கிறோம். ரகசியமாகவும், வெளிப்படையாகவும்.நம் கீழுள்ள சாதியை ஏளனமாக பார்க்கிறோம். நமக்கு மேலுள்ளவர்களால் அவ்வாறு பார்க்கப்படுகிறோம். அதிகார படி நிலைகளும் அவ்வாறே. உணவு சங்கிலி போல. சாதி சங்கிலியும், அதிகார சங்கிலியும் நாம் வெளிப்படையாக நம்மை நோக்கி விசாரிக்க வேண்டிய ஒன்று. பிராமண எதிர்ப்பும், அரசியல் அதிகார வெறுப்பும் நாம் தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் காரணங்கள்.

ஆராய்ந்து நோக்கினால்,நடு நிலை சாதிகளே தாழ்ந்த சாதிகள் மேல் வெளிப்படையாக கட்டற்ற வன்முறைகளை நிகழ்த்துகின்றன. பல கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில், அரசு அதிகாரியாக, அரசியல்வாதியாக ஒருவன் உயரும் இடத்திலிருந்து பார்க்கும் போது, அவனை சார்ந்திருக்கும் மக்கள் ஏராளம். இயல்பாகவே அவனது மனம், தன்னை ஒரு கடவுளின் தூதனாக பாவிக்கிறது. ஒரு அதிகார தோரணை வெளிப்படுகிறது. அரை நூற்றாண்டு முற்போக்கு திராவிட அரசியல், தெருவின் பெயர்களிலும், நம்முடைய பெயரின் பின் பாதியிலிருந்தும் தான் சாதியை ஒழித்ததே தவிர, நம்முடைய மனதிலிருந்து அல்ல. ஓட்டு அரசியல் என்பதே சாதி அரசியலின் மற்றொரு பரிமாணம் தான்.

நாம் நம்மை மாற்றிக் கொண்டாலொழிய, சாமானியர்கள் மீது நிகழ்த்தப்படும் சாத்தான்குளம் அதிகார வன்முறைகளும், சாதிய கொலைகள் செய்து விட்டு நிரபராதியாக நீதிமன்றங்களை விட்டு வெளியே வரும் தீர்ப்புகளும் தினமும் இந்த சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும், வெளிப்படையாகவேனும் அல்லது இரகசியமாகவேனும்.

வாழ்வு – பேரன்பின் நிழல் 01

நம் எல்லோருடைய இருப்பையும் உறுதி செய்வது நாம் வாழும் இந்த மகத்தான வாழ்வுதான்.வாழ்வென்பதே மகத்தானது தான்.ஒரு ஞானியின்,ஒரு மகாத்மாவின் வாழ்வு எவ்வளவு மகத்தானதோ அதே அளவு மகத்தானது ஒரு சாமானியனின், ஒரு திருடனின், ஒரு கொலைகாரனின் வாழ்வும்.காந்தியின் வாழ்வு எவ்வளவு மகத்தாந்தோ, கோட்சேவின் வாழ்வும் அவ்வளவு மகத்தானதே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

இயற்கை நமக்கு இந்த வாழ்வை அளிக்கிறது.அது நம் எல்லோருடைய வாழ்வையும் சமமாகவே பாவிக்கிறது. அப்படி அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதில் தான், நாம் அதனை மகத்துவப்படுத்துவதும் கீழ்மைப்படுத்துவதும் அமைகிறது. மனிதன் மட்டுமே இயற்கை நமக்கு அளித்த இந்த வாழ்க்கையை தன் போக்குக்கு மாற்றுகிறான். ஒரு பறவையோ, ஒரு சிங்கமோ. புலியோ, ஒரு மரமோ, நத்தையோ, புழுவோ மற்றும் இந்த உலகத்தில் வாழும் பல கோடி உயிர்களில் எந்த உயிரும் இயற்கைக்கு மீறி வாழ்வதில்லை.தன்னுடைய அடிப்படை தேவைகளான உணவும், இனப்பெருக்கமும் தவிர இந்த பல கோடி உயிர்களுக்கும் தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கென்று எந்த இலட்சியமும் இருக்கவில்லை.அவை எதனையும் தேடி ஓடுவதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே எப்பொழுதுமே எதையோ தேடி ஒடிக் கொண்டே இருக்கிறான்.இந்த வாழ்வை அவன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்? 

இந்த பூமியில் வாழ்வு தொடங்கி பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கும் வரலாறை பார்த்தோமானால் அதன் முடிவில்லாத புதிர், அதன் பேராற்றல் நம்மை மிகப்பெரிய பயம் கொள்ள செய்கிறது. எல்லையே இல்லாமல் விரிந்து கிடக்கும், மனித அறிவால் கற்பனையே செய்ய முடியாமல் விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்குமே உயிர்கள் இருக்கிறதென்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அப்படியென்றால் எண்ணவே முடியாத கோடிகளாய் கொட்டிக் கிடக்கும் கிரகங்களில், இந்த பூமியில் மட்டும் உயிர்கள் வாழ்கிறது என்று எண்ணும் போது வாழ்வென்பது எவ்வளவு பெரிய மகத்தான வரம் என்று எண்ண தோன்றுகிறது. 

ஒரு தெளிந்த இரவில், வெட்ட வெளியில் படுத்து வானத்தை பார்த்தால் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் வானில் தெரிகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு சூரியனாக, ஒரு கிரகமாக இருக்கிறது.இந்த நட்சத்திரங்களில் இருந்து நம்மிடம் பேசுவதற்கு யாருமே இல்லை என்று எண்ணும் போதும், இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோம் என்று எண்ணும் போது, இந்த தனிமை ஒரு பேரரக்கனாக நம்  முன் எழுந்து நிற்கிறது. 

நாம் வாழும் இந்த வாழ்வும் ரொம்ப சாதாரணமாக இந்த பூமிக்கு வந்து விடவில்லை. வெறும் தீப்பிழம்பாக, நெருப்பு பந்தாக இருந்து, மெல்ல மெல்ல குளிர்ந்து நீர் உருவாகி முதல் உயிர் இந்த பூமியில் தோன்றுவதற்கு 45 கோடி ஆண்டுகள் ஆனது.வெறும் ஒற்றை அணு உயிர் வடிவங்களாக தோன்றி, கோடிக்கணக்கான உயிரணுக்கள் கொண்ட மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வளர்ந்து வர இன்னும் பல பில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டது.இந்த பூமியின் வரலாறை பார்க்கும் போது, உயிர்களின் பரிணாம வளர்ச்சி பல மகத்தான பேராற்றல்களின் கூட்டு முயற்சி.புல், தாவரம், செடி, கொடி,மரம் போன்ற ஓறறிவு உயிர்களும், சங்கு, நத்தை, சிப்பி போன்ற ஈரறிவு உயிர்களும், கரையான்,எறும்பு, அட்டை போன்ற மூன்றறிவு உயிர்களும், நண்டு, தும்பி போன்ற நான்கறிவு உயிர்களும், பறவை , விலங்குகள் போன்ற ஐந்தறிவு உயிர்களும், ஆறறிவு கொண்ட மனிதனும் என உயிர்கள் வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றன. இயற்கையின் இந்த பேராற்றலை பார்க்கும் போது, னாம் வாழும் இந்த வாழ்க்கை எவ்வளவு பெரிய வரம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனாலும் இந்த இயற்கை  எல்லா உயிர்களையும் சமமாக படைக்காதது இந்த வாழ்க்கையின் புதிர் தன்மையை அதிகப்படுத்துகிறது. உணவுக்காக, தன் வாழ்வுக்காக ஒரு உயிர் இன்னொரு உயிரை கொன்று தான், தான் இறந்து விடாமல் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது இயற்கையின் கொடூரமான விதி. எளியாரை வதைக்கும் வலியாரை ஏனோ தெய்வம் இங்கு வாட்டுவதில்லை. அவ்வாறு தான் இயற்கை தன்னை சமன் படுத்திக் கொள்ள முடியுமா, வேறு எந்த வழியும் இல்லையா என்பதற்கு விடை இயற்கையிடம் மட்டுமே இருக்கிறது.பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் அமைவது தான் வாழ்க்கை என்றால், பிறப்பு ஒரு வரமாகவும், இறப்பு ஒரு சாபமாகவும் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் இந்த வாழ்க்கை ஒரு வரத்திற்கும் சாபத்திற்கும் நடுவிலேயே தன்னை சமன் செய்து கொண்டிருக்கிறது.

வரத்திற்கும், சாபத்திற்கும் நடுவில் சமன்படுத்தப்பட்ட வாழ்வென்றாலும், அதன் மகத்துவத்தை நம்மால் தள்ளி விட முடியாது.பல கோடி ஆண்டுகள், இயற்கையின் பேராற்றலால் வளர்ந்து வந்திருக்கும் நமது வாழ்வை நாம் எவ்வாறு வாழ்கிறோம்.பல நேரங்களில் எனக்கு தோன்றுவதுண்டு.மனித வாழ்வில், இந்த சமூகத்தில், ஒரு குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம், மனிதன் இந்த வாழ்வு உருவாகி வந்திருக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும், எல்லையில்லாத இந்த பிரபஞ்சத்தில் தான் எவ்வளவு சிறியவன் என்று உணராமலும், இந்த பூமியின்,இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திலிருந்து நடந்து கொண்டேயிருக்கும் எண்ண முடியாத நிகழ்வுகளில் தன்னுடைய சிறிய வாழ்க்கையை பொருத்திக் கொள்ளாமலும் இருப்பது தான் – மனிதனுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று தோன்றுகிறது.

கடற்கரையில் இருக்கும் மணலின் ஒரேயொரு துகளை மட்டும் எவ்வாறு நம்மால் பொறுக்கி எடுக்க முடியாதோ அவ்வாறு தான் ஒரு தனி மனிதனுடைய வாழ்வும். அவன் வாழ்க்கை அந்த கடற்கரை மணலில் கலந்திருக்கும் ஒரு துகள் போல்த்தான். அது காலத்தில் கரைந்து விடுகிறது. அதனால் தான் ஒரு மனிதன் இறந்து விட்டால் நாம் அவர் காலமாகி விட்டார் என்று சொல்கிறோம்.

ஆனால் ஒரு மனிதன் இவ்வாறு தான் தன் வாழ்க்கையை பார்க்கிறானா?

அவன் தன் வாழ்க்கையை தன்னைக் கொண்டே அடையாளபடுத்துகிறான்.அவன் தன்னை காலத்தில் கரையும் ஒரு துகள் என எப்போதும் நினைப்பதில்லை. அவன் தன்னை இயற்கையோடு பொருத்திக் கொள்ள முயல்வதில்லை. தன்னுடைய அடையாளமாக தன்னுடைய ஜாதி, தன்னுடைய அரசியல் சார்பு,தன்னுடைய தொழில், தன்னுடைய கல்வி, தன்னுடைய மதம், தன்னுடைய தேசம் இவற்றையே நம்புகிறான். தன்னுடைய நம்பிக்கைகளை நிரூபிப்பதற்காக அவன் எப்பொழுதும் தன்னுடைய சக மனிதனோடு இந்த சமூகத்திலும், தன்னுடைய குடும்பத்திலும் முரண்பட்டுக் கொண்டே இருக்கிறான்.தன்னுடைய கொள்கைகளே, தன்னுடைய நம்பிக்கைகளே மிக சரியென்று ஆழமாக நம்பி இந்த பிரபஞ்ச பேராற்றலோடு அவன் இணைவதில்லை. அவன் உலகம் வெறும் முரண்களாலும், விவாதங்களாலுமே நிரப்பட்டு இருக்கிறது. 

ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்ரியை நினைத்துப் பார்க்கிறேன். அடையாளமே இல்லாமல், அல்லது அடையாளத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிற, இந்த உலத்துக்கே தன்னை பொதுவாக்கி கொண்ட ஒரு மனிதன் மூலம் விவரிக்கப்படும் வாழ்க்கை.கிட்டத்தட்ட கஸான்ஸாக்கியின் Zorba the Greek எனும் நாவலில் வரும் Zorba என்ற கிழவனும், இந்த ஹென்றியும் ஒரே வகையான மனிதர்களே. முரண்கள் அற்ற, அடையாளங்கள் அற்ற, இலட்சியங்கள் அற்ற வாழ்க்கையை வாழும் மனிதர்களே.

ஆனால் நமக்கு முரண்களும், அடையாளங்களும், இலட்சியங்களும் மிகவும் பிடிக்கிறது. நாம் நமது வாழ்க்கையை இதற்காகவே அர்ப்பணிக்கிறோம்.

விஜயா அஜித்தா…திமுகவா அதிமுகவா…தன் ஜாதியா பிற ஜாதியா.. இந்துவா முஸ்லிமா…நீயா நானா என்று தினந்தோறும் வெற்று விவாதங்கள் மூலம் நமது கொள்கைகளை, நமது நம்பிக்கைகளை, நமது அடையாளங்களை நிரூபிக்க முயன்று கொண்டேயிருக்கிறோம். டீக்கடை சண்டைகள் எல்லாம் இன்று ட்விட்டர் மூலமும், ஃபேஸ்புக் மூலமும், வாட்ஸாப் மூலமும் சமூக அளவில் விவாதங்களாகி கொண்டிருக்கின்றன. கொண்டாடப்பட வேண்டிய பெரு வாழ்வு, சிறுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், இன்று சமூக ஊடகங்களிலோ அல்லது செய்தி ஊடகங்க்களிலோ விவாதிக்கப்படும் பல விவாதங்களுக்கு இன்னும் 10 வருடம் கழிந்தால் என்ன அர்த்தம் இருக்கும் என்றே சொல்ல முடியாது.உதாரணத்திற்கு இருபது வருடங்களுக்கு முன்பு. ஒரு பெண் சுடிதார் அணியலாமா அல்லது தாவணி மட்டும் தான் அணிய வேண்டுமா என்று இந்த சமூகம் விவாதித்து கொண்டிருந்திருந்தால், அந்த விவாதத்திற்கு இன்று என்ன அர்த்தம் இருக்க முடியும்.தாவணியை எல்லாம் நாம் இன்று மிக இயல்பாக கடந்து வந்து விட்டோம்.காலத்தை தண்டுபவை மட்டுமே விவாதம். அவை மனித இனத்தை முன்னெடுத்து செல்பவை ஆக இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் வெறும் குழாயடி சண்டைகளே.

இந்த வெற்று விவாதங்களின் மூலமும், சாதி, இனம், தொழில் என எல்லா அடையாளங்களிலும் தன்னை நிரூபித்துக் கொள்வதன் மூலமும்,  மனிதன் எதனை கண்டடைகிறான். அவனுடைய கனவுகளை இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம், அவனுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது. எதற்காக, எதனை நோக்கி அவன் ஓடுகிறான். இதற்கான ஒரே பதில், “மகிழ்ச்சி”. மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறான். அவன் அடையும் வெற்றி அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.அவன் இந்த வாழ்க்கையைப் பற்றி வளர்த்து கொள்ளும் கனவுகள் நிறைவேறும் போது, அவன் மகிழ்ச்சி அடைகிறான். தான் துயரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் இங்கு யாரும் இல்லை தானே.ஒருவன் தான் துயரமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானென்றால், அவன் அவ்வாறு துயரமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறான் என்று அர்த்தம். தாஸ்தவஸ்கியின் Notes from the Underground-ல் வரும் மனிதனைப் போல.

நானும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறேன். எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் வழி சொன்னாலும், அதனை செய்ய முயற்சி செய்ய மாட்டார்கள். நாம் சொல்லும் வழியிலும் ஆயிரம் குறைகளை கண்டுபிடிப்பார்கள்.அல்லது அதனை ஏற்க மறுத்து விடுவார்கள். உண்மையில், அவர்களுடைய ஆழ் மனது அவ்வாறு புலம்பிக் கொண்டிருப்பதையே விரும்புகிறது.இந்த உலகம் அவர்களைப் பார்த்து இரக்கப்படுவதில் அது திருப்தியடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது.

அப்படி என்றால் இந்த வாழ்க்கையின் நோக்கம், நாம் நம்மை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்வது தானா. மகிழ்ச்சியை அடைவது மட்டும் தான் இந்த வாழ்வின் இலட்சியமா? 

நூற்றாண்டுகளின் பசி

செவிகளில் அல்ல

மனதில் அமைகிறது

வார்த்தைகளின் வலிமை

நான் பாரதியின் பேரன்

ஜெயகாந்தனின் புதல்வன்

வாழ்க்கையை வாழ பழகியவன்

மரணத்தை நேசிப்பவன்

செல்லம்மா பாரதியை பிரிந்தால்

இழப்பொன்றும் பாரதிக்கு இல்லை

கள் வெறி கொண்டு கவிதை படைப்பேன்

மனிதர்களின் பித்தொன்றும்

என் முன் வேள்வி தீயென எரியும்

நூற்றாண்டுகளின் பசியும்

இரத்த வேட்கையும் 

என் நாசியில் அமைதி கொள்ளும்

களித்தாடும் காளியின் 

ஊழிக் கூத்தில் உலகம் அழியும் போது 

என் உயிரும்

என் பாரதியின் உயிரும்

என் ஜெயகாந்தனின் உயிரும்

எஞ்சி இருக்கும்

அன்று புரியும் உங்களுக்கு

என் உயிரின் வீரியம்

என் பாரதியின் வீரியம்

என் ஜெயகாந்தனின் வீரியம்

COVID-19, The World After

Mankind is living in a time of crisis, which we wouldn’t have even thought about in our wildest nightmares. If someone has asked us about Social Distancing just 6 months before, we would have confidently replied them that it will not happen in our life time. But, here we are, living a socially distanced life. Everything has changed upside down in a matter of 3 months.But this will pass too. It may take it’s time. But I am sure this will pass too. However, the impact this crisis will leave on our lives will be tremendous. The big question in our hand is what will that impact be? How will our lives change after Corona? Will that be good or bad?

This period of crisis may change the world we live in and our lives forever. Most of the major cities like New York and in few cases entire countries like Italy, Iran & India are completely locked down. People cannot go out until unless there is an essential need for them. They are asked by their offices to Work From Home. This WFH is a social experiment. If it works out and if big businesses start seeing effective results and productive turn overs, they may continue to ask their employees to WFH and change the organisation structure. The way the Human Resources are looked at may change.

Firstly, it will reduce congestion and consumption. People will reduce fuel consumption and traffic will be taken off the road. This will result in cleaner environment and good healthy life. Secondly, people will start spending time with their families and this will result in true happiness and good healthy life.

Working from Home is not new to humans. Before Cognitive Revolution, when we were hunter gatherers, work, home and life were no different. Humans worked only for food. During the period of agricultural revolution,people lived close to their work. The land that they were farming is where they lived. It is only after the industrial revolution and the current digital revolution, people started moving out of their houses to work.So, going back in time to WFH is not new and can be easily adapted. Moreover we are in an advanced communications period of history with no two individuals need to see each other to communicate their thoughts and feelings. Digital technologies can make WFH an effective way of living,

If WFH becomes a practice, then it is the revolution we are talking about. Mother Nature & Planet Earth will be safe and we can together start rebuilding this world for the betterment of the next generation & society.

Nature,now and then tries to show the place for human species in this world.Natural Calamities, Contagious diseases are few lessons that nature tries to teach us.These lessons are taught to us at the cost of human lives.But we do not learn our lessons. This time, we were not given a choice. The global crisis has put a brake on the global economy and the future is going to be difficult. We are moving towards a time where we may have to share our belongings with a fellow being. Together we have to live as a single society.We may have to live a life with essentials and not luxuries.

But we may ignore all these and continue to move on with our daily lives as usual once the Doctors and Scientists find medicines. We will get our vaccination shot and move on as if nothing has happened. We may behave like we just woke up from a nightmare and nothing has changed. We are Humans – the most dangerous species in this planet.

மய்யழிக் கரையோரம்

downloadMayyazhippuzhayude_Theerangalil,_book_by_M._Mukundan

மய்யழிக் கரையோரம் (மலையாள மூலம்: மய்யழிப்புழையோடே தீரங்களில்எம்.முகுந்தனால் 1974 -ல் வெளியிடப்பட்ட நாவல். அவரது பல மகத்தான படைப்புகளில் இந்த நாவலும் ஒன்று. மேலும் மலையாள இலக்கியத்தில் காலத்தை தாண்டிய இடம்பெற்ற நாவல். இந்த நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹே அருங்காட்சியத்தில் அரசு காட்சிப்படுத்தி வைத்திருப்பது, இந்த நாவலின் முக்கியத்துவத்துக்கான சான்று.

மய்யழி ஆற்றின் கரையில் இருக்கும் மாஹேவை கதைக்களமாக கொண்டு, அவ்வூரின் நிலவியலையும், வாழ்வியலையும் மூன்று தலைமுறைகளாக விரித்துச் செல்லும் நாவல். இந்நாவலை மிகை புணைவு(Fantasy Fiction), வரலாற்றுப் புணைவு(History Fiction) வகைமைகளில் அடக்கலாம். மாஹேவின் சமூக கலாச்சாரத்தையும், அரசியலையும் பல கதாபாத்திரங்களின் வழியே விவரிக்கிறது இந்நாவல்.

வாழ்வியல் பிரச்சனைகளை தத்துவ நோக்கில் சிந்திக்க வைக்கும் எழுத்துக்களே காலத்தை தாண்டிய கலைப்படைப்பாக எழுந்து நிற்கின்றன.அந்த வகையில் மய்யழிக் கரையோரம், மலையாள – இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்.

கதையின் மையப்பாத்திரங்கள் உயிருள்ள மனிதர்களைத் தாண்டி, ஒரு மகா நாடகத்தை, காலம் இயற்றும் மனிதர்களின் வாழ்க்கையை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் மய்யழி ஆறும், அது சேரும் சமுத்திரமும், மாஹே நிலமும், அவ்வூரில் ஓங்கி உயர்ந்து நிற்கும் தேவாலயத்தின் சிலுவையும் தான்.இவைகளை சாட்சியாக வைத்துக் கொண்டு தாசனின் வாழ்க்கையை, அவன் சார்ந்த மனிதர்களின் வாழ்வை முகுந்தன் மிகு உணர்ச்சிகளோடு எழுதியிருக்கிறார்.இருத்தலின் துன்பத்தை, காலத்தால் துடைத்தெறியப்படும் வாழ்க்கையை, மனிதர்களின் அக உணர்வுகளை பதிவு செய்கிறது இந்நாவல்.

நாம் வாழும் இந்த நிமிடத்தின் துன்பங்கள் நமக்குப் பெரிதென தெரிந்தாலும், அது கடந்த காலத்தின் வெறும் நினைவுகளாக மாறும் போது, இப்பெரு வாழ்வில் ஒரு புள்ளி  தான் நாமென்றும், நம்முடைய துயரங்கள் எல்லாம் எண்ணில்லாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுகளில் கரையும் நீர்த்திவலை என்றும் உணரும் பல தருணங்கள் இந்த நாவலின் வழியே சொல்லப்படுகிறது.

குறம்பியம்மாவும், தாசனும் இரு முக்கிய கதாபாத்திரங்கள்.மூன்று தலைமுறைகளாக மாஹேவில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் அவள் சாட்சியாக இருக்கிறாள். ஃப்ரெஞ்ச் அரசாங்க நிர்வாகத்தில் இருக்கும் மாஹேவின் நாட்களுக்கும், பின்னர் தாசன் மூலமாக உருவெடுக்கும் போராட்ட நாட்களுக்கும் அவளே சாட்சி.லெஸ்லிதுரையிடமும்,மிஸ்ஸியம்மாவிடமும், ஃப்ரெஞ்ச் துரைகளிடமும் இணக்கமாக இருக்கிறாள்.  தனது பேரன் தாசனை மடியில் அமர்த்தி மய்யழியின் கடந்த கால கதைகளையும்,வெள்ளியாங்கல்லில் பறக்கும் தும்பிகளான ஆன்மாக்களை பற்றியும் சொல்கிறாள். பின்னர் அவனே போராட்டக்காரனாகிப் போனதும் அவனை நினைத்தே ஏங்கி வாழ்ந்து காலத்திரைக்குப் பின் மறைந்து போகிறாள்.

லௌகீகத்துக்கும் இலட்சியத்துக்குமான போராட்ட வாழ்க்கை தாசனுடையது.மிக சிறப்பாக படித்து தனது தந்தையை பெருமை கொள்ள செய்பவன், பின்னாளில் அவனுக்கு கிடைக்கும் அரசாங்க வேலையை மறுத்து விட்டு கலகக்காரனாகிறான். அவனது குடும்பம் சிதைகிறது.உறவுகளுக்கும் இலட்சியத்திற்கும் இடையில் தவிக்கிறான்.எல்லோரையும் இழந்து மறு பிறவிக்கு முன் ஓய்வு எடுப்பதற்காக வெள்ளியாங்கல்லில் தும்பியாய் பறக்கும் தனது காதலி சந்திரகாவின் நினைவுகளோடு வாழ்வை முடிக்கிறான்.

பேடியாய் வீட்டில் கதவடைத்துக் கொண்டு,இரவுகளில் சோக கீதம் வாசித்துக் கொண்டு,30 ஆண்டுகள் வெளியே வராமல் வாழ்வை சுமையென சுமக்கும் லெஸ்லீதுரையும், அடுத்த நிமிடம் இருப்பதே ஐயெமென கொள்ளும் அளவிற்கு உடல் முழுக்க நோய் இருந்தாலும், அந்த நிமிடம் வாழ்ந்தே தீர வேண்டுமென கடமையாற்றும் குஞ்சனந்தன் மாஸ்டரும், வாழ்வைப் பற்றிய இரு வேறு புரிதல்கள்.

உண்ணிநாயர்,குஞ்சிருத்தை,குஞ்சக்கன்,மிஸ்ஸியம்மா,மூப்பன்துரை,தாவீதுதுரை,கனாரன்,வாசூட்டி,பப்பன்,லீலாக்கா,பரதன்,தாமு ரைட்டர்,கிரிஜா,அச்சு என பலரின் வாழ்க்கை மூலம் வாழ்வின் பேராற்றலும், பெருந்துயரங்களும்,இருத்தலின் துன்பங்களும்,வெறுமைகளும் ஒரு பெரும் வாசிப்பு அனுபவமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இது மய்யழியின் கதை.ஒரு நாடக மேடை போல,அந்த நிலத்தில் பலரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து மறைகிறார்கள்.பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான ஒரு தனி மனித வாழ்வின் நிகழ்வுகள், எண்ணற்ற மனிதர்களின் வாழ்வாய் உருக்கொள்ளும் போது, அது காலம் இயற்றும் ஒரு மிகப்பெரிய நாடகம் என்று புரிகிறது.

அவ்வாறெனில், தனி மனித வாழ்வின் அர்த்தம் தான் என்ன? எதனை நோக்கி நாம் பயணிக்கிறோம்?

கொரோனாவும் சர்வதேச ஒற்றுமையும்

கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலகம் எதிர்கொண்டு போராடி வரும் கொரோனா தொற்று நோய்க்கு, உலகமயமாக்கலே ஒரு முக்கிய காரணம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகளை மூடுதல், பயணங்களுக்கும் வணிகங்களுக்கும் கட்டுப்பாடு விதித்தல் மூலமாக இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன. தனிமைப்படுத்தல் தற்காலிக தீர்வாக இருப்பினும், இது நீண்ட காலம் தொடர்ந்தால் அது பொருளாதார பேரழிவை நோக்கியே நகரும். தொற்று நோய்க்கான உண்மையான தீர்வு, தனிமைப்படுத்தலில் அல்ல, ஒத்துழைத்தலில் மட்டுமே இருக்கிறது.

download

வரலாற்றின் பக்கங்களில், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்னரே தொற்று நோய்கள் மூலம் மனித இனம் பேரழிவை சந்தித்திருக்கிறது. விமானங்களும் பயண கப்பல்களும் இல்லாத 14-ம் நூற்றாண்டில் ப்ளேக் தொற்று நோய் கிழக்கு ஆசியாவிலிருந்து, மேற்கு ஐரோப்பாவிற்கு பரவி, கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இறந்தனர். இது ஐரோப்பிய-ஆசிய கண்டத்தின் கால் பகுதி மக்கள் தொகை. இங்கிலாந்தில் பத்தில் நான்கு பேர் இறந்தனர். ஃப்ளோரன்ஸ் நகரத்தில் மட்டும் 50,000 முதல் 1,00,000 மக்கள் வரை இறந்தனர்.

1520 மார்ச் மாதத்தில், Francisco de Eguia என்ற தனி மனிதர் வைசூரி(பெரியம்மை) நோயுடன் மெக்சிகோவில் இறங்கினார். அந்த நேரத்தில், மத்திய அமெரிக்காவில் புகைவண்டிகளோ, பேருந்துகளோ அல்லது பொதி கழுதைகளோ கூட கிடையாது. ஆனாலும், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக வைசூரி நோய் மத்திய அமெரிக்காவை பேரழிவுக்கு உள்ளாக்கியது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை இந்த தொற்று அழித்தது என்று கணிக்கப்படுகிறது.

1918-ல் ஒரு கொடிய காய்ச்சல், உலகின் தொலைதூர மூலைகளுக்கெல்லாம் சில மாதங்களுக்குள்ளாகவே அதி வேகமாக பரவியது. பல இலட்சம் மனிதர்களை – கிட்டத்தட்ட மொத்த மனித இனத்தின் கால் பங்கு மனிதர்களை – அது தாக்கியது. இந்தியாவின் மக்கள் தொகையில் 5% மக்கள் இந்த கொடிய காய்ச்சலால் மரணித்ததாக கணக்கிடப்படுகிறது. தாஹிதி தீவில் 14% மக்களும், சமோயாவில் 20% மக்களும் இறந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மொத்தத்தில் 100 மில்லியன் மக்கள்,  ஒரு வருடத்திற்குள்ளாகவே,இந்த கொடிய காய்ச்சலால் இறந்தனர். இது நான்கு வருடமாக நடைபெற்ற முதல் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது.

im-147235

கடந்த சில நூற்றாண்டுகளில் பெருகும் மக்கள் தொகை, மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து போன்ற காரணங்களால் மனித இனம் தொற்று நோய்களால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகவும் வலு அடைந்திருக்கின்றன. தற்கால பெரு நகரங்களான டோக்கியோவோ அல்லது மெக்சிகோவோ இடைக்கால ஃப்ளோரன்ஸ் நகரத்தை விட, நோய்க்கிருமிகளுக்கான மிகப்பெரிய உற்பத்தி கூடமாக மாறி இருக்கிறது.மேலும் 1918 ஐ விட, இன்று போக்குவரத்து மிகவும் மேம்பட்டிருக்கிறது. ஒரு தொற்று நோய் வைரஸ், ஃப்ரான்ஸிலிருந்து டோக்கியோவிற்கும் மெக்சிகோவிற்கும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பரவ முடியும். இந்த சாத்தியக் கூறுகளால், உண்மையில் நாம்  தினமும் புதிது புதிதான கொடிய தொற்று நோய்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனாலும், இந்த கொடிய தொற்று நோய்களின் நிகழ்வுகளும், அதன் பாதிப்புகளும் மிகவும் குறைந்து விட்டிருகின்றன. 21ம் நூற்றாண்டில் எபோலா, எய்ட்ஸ் போன்ற கொடூரமான நோய்களின் பாதிப்புகள், வரலாற்றின் எந்த காலங்களையும் விட குறைந்தே இருந்தது. இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் சிறந்த தற்காப்பு, தனிமைப்படுத்துதல் அல்ல, தகவல்படுத்துதல். இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிரான போரில் மனிதன் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் – கிருமிகள் கட்டற்ற மாறுதல்கள் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுகின்றன. ஆனால் நமது மருத்துவர்கள், அறிவியல் பூர்வமான தகவல் ஆய்வுகள் மூலம் இந்த நோய்க்கிருமிகளை வெல்கின்றனர்.

14-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் வைசூரி நோய் பரவிய போது, அந்த நோய்க்கான காரணமோ, தீர்வோ மனிதர்களிடம் இல்லை. மனித இனம் அறிவியல் வளர்ச்சி அடையும் வரை நோய்க்கான காரணங்களாக கடவுள்களையும், தீய சக்திகளையும், அசுத்தமான காற்றையும் மட்டுமே நம்பி கொண்டிருந்த்தனர்.நுண் கிருமிகளையோ, வைரஸ்களைப் பற்றியோ மனித இனம் அறிந்திருக்கவே இல்லை.இதனால், வைசூரி நோய் பரவிய போது, மனிதர்கள் கடவுள்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதுவே வைசூரி நோய் விரைவாக பரவ வழி செய்தது.

ஆனால் கடந்த நூற்றாண்டில், உலகம் முழுவதும் இருந்து மருத்துவர்களும் அறிவியலாளர்களும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஆய்வுகளின் மூலம் கொடிய தொற்று நோய்களுக்கான காரணங்களையும், அவை பரவும் முறைகளையும், அவற்றை நாம் எதிர்கொள்வதற்கான வழிகளையும் அறிந்து வைத்திருக்கின்றனர்.பரிணாமக் கோட்பாடு புதிய நோய்கள் உருவாகும் முறைகளையும், அவை கொடிய நோய்களாக பரிணமிக்கும் முறைகளையும் நமக்கு விளக்குகின்றன. மரபியல் மூலம் நம்மால் நோய்க்கிருமிகளின் கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.மத்திய கால மக்களால் வைசூரி நோய்க்கான காரணத்தை அறிந்து கொள்ளவே முடியாதிருந்த நிலை மாறி, இன்றைய அறிவியலாளர்கள் வெறும் இரண்டே வாரங்களில் கொரோனா வைரஸ்களின் மரபணு கூறுகளை கண்டுபிடிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம்.

coronavirus-7

தொற்று நோய்கள் பரவுவதற்கான காரணங்களை நமது அறிவியலாளர்கள் அறிந்து கொண்டவுடன், அவற்றை எதிர்த்து போராடுவது சுலபமாகிறது.தடுப்பூசிகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள், உயர்தர மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என இவை யாவும், மனித இனத்தை இந்த கொடிய நுண்ணுயிர் கிருமிகளிடம் போராட வழி செய்திருக்கின்றன.1967-ல் பெரியம்மை நோய் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்களை தாக்கியது. அதில் 2 மில்லியன் மக்கள் இறந்தனர். ஆனால் அடுத்த 10 வருடங்களில் பெரியம்மை முழுவதுமாக அழிக்கப்பட்டது. 2019 ல் ஒருவர் கூட பெரியம்மையால் பாதிக்கப்படவோ இறக்கவோ இல்லை என்பது மனித இனத்தின் பெரும் வெற்றியாக கொள்ளப்படலாம்.

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு வரலாறு நமக்கு சொல்லும் பாடம் என்ன?

முதலில், நாட்டின் எல்லைகளை மூடுவதால் மட்டுமே இந்த நோய்ப்பரவலை நம்மால் தடுக்க முடியாது. உலகமயமாக்கலும்,இரண்டு நாடுகளுக்கு மத்தியில் மேம்பட்ட போக்குவரத்தும் இல்லாத மத்திய காலங்களிலே கூட தொற்று நோய்கள் வெகு வேகமாக பரவின.1348-ல் இங்கிலாந்து அப்பொழுது வெகு வேகமாகப் பரவிய ப்ளேக் நோயைக் கட்டுப்படுத்த, தனது மொத்த மக்களையும் தனிமைப்படுத்தியது. அந்த அளவிற்கு இப்பொழுது நாம் தனிமைப்படுத்தப்பட்டால் கூட, கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. நம் மக்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்றால், நாம் காலத்தில் பின்னோக்கி கற்காலத்திற்கு செல்ல வேண்டும். இன்றைய நுகர்வு கலாசாரத்தில்,நுகர்வு பொருளாதாரத்தில் இதனை அடைவதற்கான சாத்தியம் மிக குறைவே.

இரண்டாவதாக வரலாறு நமக்கு சொல்லும் பாடம், மக்களுக்கான உண்மையான பாதுகாப்பு நம்பகத்தன்மையான அறிவியல் தகவல்களையும், உலக ஒற்றுமையையும் சார்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு தொற்றுநோய் பரவி பெருகினால், அதனைப் பற்றிய உண்மையான தகவல்களை, பொருளாதார தாக்கங்களை பற்றிய பயம் இல்லாமல், அந்த நாடு மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இன்றைய சூழலில், சீனாவால் உலக நாடுகளுக்கு கொரோனாவைப் பற்றிய மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தகவல் பரிமாற்றம் சர்வதேச அளவிலான நம்பகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது.

கொரோனா வைரைஸைத் தடுக்க பல நாடுகள் எடுக்கும் தனிமைப்படுத்தல் முயற்சி வெற்றியைடைய சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.தனிமைப்படுத்தலும்,செயல் முடக்கமும் இப்போதைக்கு மிகவும் அவசியமென்றாலும், ஒவ்வொரு நாடும் தாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்று எண்ணினால், இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெரிதும் தயங்கும்.ஏனென்றால், இந்த நடவடிக்கைகள் தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. மற்ற நாடுகள் தங்களுக்கு உதவும் என்று நம்பினால், எந்த அரசாங்கமும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்ளும். ஆனால் தங்களுக்கு சர்வதேச உதவி கிடைக்காதென்று இவர்கள் நம்பினால், தடுப்பு நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்ளாமல், பல உயிர்களின் இழப்புக்களை அமைதியாக பார்க்கவே நேரும்.

மேலும்,இது போன்ற தொற்று நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதால், ஒரு நாட்டின் பிரச்சனையாக தொடங்கி,ஒட்டுமொத்த மனித இனத்தின் பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக கொரோனா வைரஸ் காட்டு வவ்வால்களிடமிருந்து தோற்றமடைந்து, மனிதர்களின் உடல்களுக்குத் தாவுகின்றன.தொடக்கத்தில் அவை மனிதர்களின் உடல்களுக்கு தங்களைப் பொருத்திக் கொள்ள சிரமப்பட்டாலும்,கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் உடலுக்கேற்ப மாறுதல்கள் கொள்ள ஆரம்பிக்கின்றன.அவை அடையும் பல மாறுதல்கள் மனிதர்களுக்கு தீங்கு இழைக்கவில்லையெனினும்,ஏதெனும் ஒரு மாறுதல் மனித உடலின் தடுப்பாற்றலை மீறி மனித இனத்திற்குப் பேரழிவாய் உருவாகி மிக வேகமாக மக்களிடம் பரவுகிறது.ஒரு சூது விளையாட்டினைப் போல, ஒவ்வொரு மனித உடலும் இந்த நுண்ணுயிர்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பல மில்லியன் வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருக்கிறது. இந்த நோய்க் கிருமிகள் மனிதனை வெல்ல, இந்த மில்லியன் வாய்ப்புகளில் ஒரேயொரு வாய்ப்பு போதுமானதாக இருக்கிறது.

இது வெறும் கணிப்பு அல்ல. ரிச்சர்ட் ப்ரெஸ்டனின் “Crisis in the Red Zone” என்ற புத்தகம் எபோலா தொற்றின் போது நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியை துல்லியமாக விவரிக்கிறது. 2014ல் எபோலா வைரஸ் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது.ஆரம்பத்தில் இவை மனிதர்களின் உடல்களுக்கு பழக்கப்பட்டதை விட,வவ்வால்களின் உடல்களில் வசிப்பதற்கே மிகவும் பழக்கப்பட்டிருந்தது.மேற்கு ஆப்பிரிக்காவில் மகோனா என்ற இடத்தில், ஏதோவொரு எபோலா தான் தொற்றியிருந்த மனிதனின் உடலில் மரபணு திரிபு அடைந்த போது அந்த மனித உயிரணுக்களின் கொழுப்பு கடத்தியில் தன்னை இணைத்துக் கொண்ட போது தான் இதன் ஆற்றல் பல மடங்கு பெருகி மனித இனத்திற்கு பேரழிவாக உருப்பெற்றது.இதனால்,கொழுப்பிற்கு பதில் இந்த வைரஸ் அந்த உடலெங்கும் கடத்தப்பட்டது.இவ்வாறே எபோலா தொற்று மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தது.

இதனை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், எபோலா திரிபினை ஒத்த கொரோனா திரிபு, கொரோனா பாதித்த ஒரு மனிதனின் உடலில் இரானிலோ, இத்தாலியிலோ, சீனாவிலோ நடந்து கொண்டிருக்கலாம்.அவ்வாறு கொரோனா வைரஸ் தன்னை பரிணமித்துக் கொண்டிருக்காமாயின்,அது இரானியர்களுக்கும், இத்தாலியர்களுக்கும், சீனர்களுக்கும் மட்டுமான பாதிப்பு கிடையாது.ஒட்டு மொத்த மனித இனத்திற்குமான பாதிப்பு.எனவே, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒவ்வொரு தனி மனிதனையும் காப்பது நமது கடமை.

1970-ல் வைசூரி நோயிலிருந்து மனித இனம் தன்னை காத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா மக்களுக்கும் இந்த நோய்க்கான தடுப்பூசி கொடுக்கப்பட்டதுதான்.ஏதேனும் ஒரு நாடு, இதிலிருந்து பிறழ்ந்திருந்தால், இந்த நேரம் வைசூரி நோய் மனித குலத்திற்கான பேரெதிரியாக மாறியிருக்கும்.ஏனென்றால், இந்த வைரஸ் எங்கோ ஏதேனும் ஒரு நாட்டின் மூலையில் இருந்திருந்தாலும் கூட, அது பெரும் ஆற்றலுடன் தன்னைத் தானே பரிணமித்து பரவ தொடங்கியிருக்கும்.

இந்த நுண்ணுயிர்களுக்கு எதிரான போரில், மனித இனம் எல்லைகளை காப்பது மிக அவசியம். ஆனால் அது நாட்டின் எல்லைகள் அல்ல.வைரஸ்களின் உலகத்திற்கும்,மனித உலகத்திற்குமான எல்லைகளை.இந்த உலகத்தில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உருவாகி கொண்டிருக்கின்றன.அவை தினமும் பல்வேறு மரபணு மாறுதல்களை அடைகின்றன.இந்த எல்லைக் கோடு நம் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்கிறது.உலகின் ஏதொவொரு மூலையில்,ஏதோ ஒரு மனிதனின் உடலில் இந்த எல்லையை ஒரு வைரஸ் மீறினால், அது உலக மக்கள் அனைவருக்குமான பேராபத்து.

கடந்த நூற்றாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த எல்லை பாதுகாக்கபடுகிறது.நவீன மருத்துவமும், மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களும் இதனை சாத்தியப்படுத்தி நம்மை வைரஸ்களிடமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் இந்த எல்லைகளை முழுமையாக நமது கட்டுக்குள் கொண்டு வர, நாம் தொலைதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.உலகின் பல நாடுகளில், பல இலட்சம் மக்களுக்கு அடிப்படையான மருத்துவ சேவையே இன்னும் சென்றடையவில்லை.இது நம் எல்லோரையும் பேராபத்திற்கு உள்ளாக்குகிறது.இரானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் அளிக்கப்படும் உயரிய மருத்துவ வசதி, அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் பேரழிவில் இருந்து காக்கும்.இந்த எளிய உண்மை,நம் உலகின் முக்கிய தலைவர்களுக்கு சென்றடையாதுதான் மிகப்பெரும் வேதனை.

தலைவன் இல்லாத உலகம்

download (1)

இப்பொழுது மனித இனம் ஒரு கடுமையான நெருக்கடியில் இருக்கிறது.அதற்கு கொரோனா மட்டும் காரணமல்ல.மனிதர்களுக்கிடையே இருக்கும் நம்பிக்கையின்மை.ஒரு பெரும் ஆபத்தை வெல்ல மக்கள் அறிவியலாளர்களையும்,குடிமக்கள் அரசு அதிகாரிகளையும் நம்ப வேண்டும்.இரு வேறு நாடுகள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பில்லாத உலக தலைவர்கள் அறிவியிலையும்,அதிகாரிகளையும்,சர்வதேச ஒருமைப்பாட்டையும் அரசியல் காரணங்களுக்காக குறைத்து மதிப்பிடுகிறார்கள்.இதன் விளைவாக,இன்று நாம் இந்த நெருக்கடியை சர்வதேச ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் தலைவர்கள் இல்லாமல் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நெருக்கடியான சூழலில்,மிக முக்கியமான போராட்டம் மனித இனத்திற்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறது.உலக நாடுகள் ஒன்றிணையவில்லையெனில்,ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லையெனில்,அதுவே கொரோனாவின் மகத்தான வெற்றி.உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடினால்,இந்த ஒற்றுமையை சாத்தியமாக்கும் தலைவர்கள் அதிகாரம் பெற்றால் கொரோனாவையும், இனி வரும் எல்லா தொற்று நோய்களையும் நம்மால் வெல்ல முடியும்.ஏனென்றால் இது ஒரு நாட்டின் பிரச்சனை அல்ல.உலகத்தின் பிரச்சனை.மனித இனத்தின் பிரச்சனை.

Translated from In the Battle Against Coronavirus,Humanity Lacks Leadership by Yuval Noah Harari datted 15 March 2020 in Time Magazine

பேரிருள்

கிழித்தெறியப்பட்ட

காகிதங்களின் வழியே நுழைகிறேன்

ஒரு உலகப் புகழ்பெற்ற கவிதை
எழுதிய கவிஞனின் மனதினுள்

புற சலனமற்ற வெளியென
காற்றும் ஒளியும் அற்ற அந்தரமென
கதவுகளும் ஜன்னல்களும் அடைக்கப்பட்டு
கலைத்தெறியப்பட்ட வீடென
கிடக்கிறது அவன் மனம்

கருவறையின் சலனமற்ற நீட்சி
மூச்சு திணறலுடனும்
பேரிருளில் தவிக்கும் கண்களுடனும்
உலகை கற்பனை செய்யும் சிசுவென
அக வெளியை விரிக்கிறேன்

ஒரு உலகப் புகழ்பெற்ற கவிதையை
இந்த பேரிருளில் இருந்து
எவ்வாறு பொறுக்கி எடுத்து
அந்த கவிஞனால் இசைக்க முடிந்தது?

வார்த்தைகளாய்
ஆதியையும் அந்தத்தையும்
இந்த பேரிருளில்
எவ்வாறு அவன் அடுக்கினான்?

அடுக்கிய வார்த்தைகளை
இந்த பேரிருளில்
எவ்வாறு நூலில் கோர்த்து
ஒரு உலகப் புகழ்பெற்ற கவிதையாக்கினான்?

பேரிருள் மட்டுமே அறிந்த சூட்சமமது

பிறப்பின் இரகசியத்தை
பேரிருள் மட்டுமே அறிகிறது

பேரிருளிலிருந்தே
ஒரு உலகப் புகழ்பெற்ற கவிதை பிறக்கிறது

பேரிருளிலிருந்தே
உயிர் பிறக்கிறது

பேரிருளிலிருந்தே
அண்டம் பிறக்கிறது

Realm of Mind


Time and again, mankind has tirelessly made efforts to understand and define mind and consciousness. There are innumerable philosophical and psychological theories about mind and its relationship to the body. And yet, we haven’t arrived at a convincing understanding about mind. This makes  it more curious and intriguing. Understanding mind is like understanding the God. His very existence is theoretically approachable, but not practical. 

Through the ages of evolution and the time recorded in history, the need for the existence of mind has been as essential as the need for the existence of God. The comfort of believing in a God has always helped mankind to escape from fear and live a harmonious life. But since the material existence of God is difficult to prove, we only “believe” in his existence. And “believing” is really a “mind” thing.  So very convincingly we can argue that the Realm of God is actually the Realm of mind. When the mind cease to exist, God will die too. And this can be extended to the existence of this universe too.

The mind-body dualism has been a great puzzle that is waiting to be solved. If the very existence of this universe can be centred around the existence of mind, the capabilities of this mind then should be infinite. 

We have to agree that our physical body is bound to space, time and gravity and is limited to the rules that are governing this universe. But the power of mind is such that it can exist in  physical realm and  quantum realm at the same time. Or it can travel between ice age to stone age to medieval period to yesterday at its own will. It can sit down between Gandhi and Hitler and Aristotle for a coffee whenever it wants to. It has created languages, religion, machines and literally everything that we see that did not exist naturally.So is the power of mind.

Can its infinite capabilities be used to better ourselves and live a mind full life?

In this age of consumerism and social media, our behaviours are shaped by not our mind, but by YouTube and Facebook etc.,Mind wandering has become a common thing and we do not have control over our time and life. We believe  that our consumer habits today leads us to happiness. But it only leads us to stress and greed. Multitasking, Evolution pressure, Material quest, Working towards social recognition, Living away from nature are all what we have achieved by behaving in the way we are shaped by our education and technology. But isn’t life more beautiful to live? Doesn’t it have more purpose than this? Is it not meant to be happy? This can only be achieved by living inwardly. The psychological betterment and not the material betterment will give us true and long lasting happiness. 

A mindful life can be started easily. Taking away thirty minutes of your time everyday for reading couple of books and cultivating that as a behaviour is a good start.. Again, it is important to read good books. Keeping away or responsible use of  social media is a fantastic way to live a stress free life.  The realm of mind is so beautiful and it is upto an individual to taste this nectar. Do not take the life for granted. Live as if you are going to die tomorrow .For, that may be true too. And living those moments between today and your final day is important than anything else. Only a mind full life can help you achieve this.

கருஞ்சுவர்


மேட்டுப்பாளையத்தில் பட்டியிலின மக்கள் வாழும் காலனியை தான் வாழும் இடத்தில் இருந்து பிரிப்பதற்காக, அதே ஊரை நேர்ந்த ஒருவர் எழுப்பியிருந்த 20 அடி கருஞ்சுவர் பெருமழையில் சரிந்து 17 பேர் இறந்திருக்கின்றனர். இவர்கள் பட்டியிலின மக்களாக இல்லாத பட்சத்தில், இது வெறும் விபத்தாக கருதப்பட்டிருக்கும்.  ஆனால், இப்பொழுது இது மேட்டிமைக் குடியின் அரசியல் அதிகார திமிராக கருதப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்த 20 அடி சுவர், அடிப்படை பொறியியல் விதிகளை மீறி கட்டப்பட்டு, அதற்கு நகராட்சி நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 17 பேரின் மரணமும் தமிழக ஊடகங்களாலும் மக்களாலும் விவாதிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் அடங்கிப் போகும். நிரந்தர தீர்வுகளை நோக்கி நாம் எப்பொழுதும் நகர்வதில்லை. உண்மையில் நாம் நகர்த்தப்படுவதில்லை. பாலியில் , பெண்ணிய அறம், சாதி என இவை எல்லாவற்றையும் நாம் மிக மிக அடிப்படை அளவிலேயே புரிந்து வைத்திருக்கிறோம். நமது பள்ளிக் கல்வி, நம்மை மேம்பட்ட எந்திரமாக மாற்றுகிறதே தவிர, நம்மை மேம்பட்ட வாழ்வுக்கு தயார் செய்வதில்லை.நம்மில் பெரும்பாலானோருக்கு கல்வி புத்தகத்தை தாண்டி வாசிக்கும் பழக்கமே இல்லை. இருத்தலியல் துன்பங்களையோ, வாழ்வின் அழகியலையோ சார்த்தர், நீட்சே, காப்கா, காம்யூ, தாஸ்தவ்யெஸ்கி, கசான்சாகி, பாரதி, காளிதாசன் மூலம் அறிந்து கொண்டால் நம்முடைய அடிப்படை அறிவு மேம்பட்டு, வாழ்வின் தரிசனம் கிடைக்கும். ஆனால் நமது வாசிப்பு Facebook, WhatsApp – உடன் நின்று விடுகிறது. பொருளதார, புற வாழ்வு மேம்பாடு ஆசைகளாலேயே உந்தப்பட்டு வாழ்கின்ற நுகர்வு சமூகமாக மாறி விட்டிருக்கிறோம். இன்றைக்கு இந்த சமூகம், ஒரு மிகப்பெரிய நுகர்வு சந்தை. பெரு முதலாளிகளும், அரசியல்வாதிகளும் பொருட்களையும், அதிகாரத்தையும், சட்டத்தையும் நம்மிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம், நாமும் களிக்க களிக்க அனுபவித்து விட்டு, நம்முடைய இரகசிய ஆசைகளை குழந்தைகளை புணர்வதன் மூலமும், பாலியல் வண்கொடுமைகள் மூலமும், சாதிய அடக்குமுறைகள் மூலமும் நிறைவேற்றி கொள்கிறோம்.

இவ்வாறு அடிப்படை புரிதல்களோடு மட்டுமே வாழும் பெரும்பான்மையான மக்களை கொண்ட ஒரு சமூகம் தம்மை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களை சாதிய அடிப்படையிலும், அவர்கள் வாக்குக்கு தரும் பணத்துக்காகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் என்பது, நிர்வாக கலை மற்றும் அறிவியல் என்ற அரிஸ்டாட்டிலின் விளக்கம் மாறி, அது வெறும் கமிஷன் மற்றும் பெருவாரியான சாதிக்கான அதிகார ஆசையாகவும் மாறி விட்டது. ஒரு அரசனுக்கு கலை  இலக்கிய புரிதல்களும், தத்துவப் பார்வையும்,பண்பாடு சமூக வரலாறு அறிதல்களும்,  நிர்வாக திறனும், தொலை நோக்கு சிந்தனையும் அடிப்படை குணங்கள். இவற்றில் ஒன்று கூட இல்லாதவர்கள் தான் இன்றைக்கு நமது ஆட்சியாளர்கள். இவர்கள் ஆட்சியில் எழுதப்படும் கல்வி கொள்கைகளும்,சாதிய சட்டங்களும், சமூக பாதுகாப்பும் ஒரு குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்.

நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் வரை, புற தேடல்களை தாண்டி அக தேடல்களை நோக்கி நாம் நகராத வரை, நம்முடைய ஆன்மீக புரிதல்களோ, வாழ்வின் தரிசனங்களோ நமக்கு விளங்கப் போவதுமில்லை. இந்த சமூகம் மேம்படப் போவதுமில்லை. சக மனிதனை மனிதனாகப் பார்க்காமல், ஒரு கல்சுவரை எழுப்பி அவனை தனது பார்வையில் இருந்து மறைத்து வைக்கும் ஒருவன் பொருளாதார ரீதியாக எவ்வளவு உயரத்தில் இருந்தால் தான் என்ன? தன்னோடு படிக்கும் சக மாணவியை பாலியல் வண்கொடுமை செய்து அதனை படம் பிடித்து வைத்து மிரட்டும் ஒரு இளைஞன் எவருடைய மகனாக இருந்தால் தான் என்ன? இவர்கள் எல்லம் அடிப்படையான மனிதத்தன்மையை இழந்தவர்கள். இவர்களுடைய சாதி, அரசியல் அதிகாரம் எல்லாம் தோற்று, உடல் கலைந்து இவர்களுடைய ஆன்மா நிற்கும் ஒரு நாளில் உணர்வார்கள் தங்களுடைய தவறுகளை. 

இந்த கருங்கல் சுவர் ஒரு அறியாமையின், திமிரின் குறியீடு.. இது நம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது.அது சரிந்து விழும் பொழுதில் படைப்பின் மகத்துவம் புரியும். நம்முடைய அடுத்த தலைமுறையை மனிதத்துக்கு அறிமுகப்படுத்துவது நமது கடமை. இன்றைய கல்வி சூழல் அவர்களை வெறும் போட்டியாளர்களாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த கல்வி அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்டெடுப்பதிலிருந்து நம்முடைய மாற்றம் தொடங்கட்டும். நல்ல இலக்கிய, தத்துவ புத்தகங்களை அவர்களை வாசிக்கப் பழக்குவோம்.  ஜே கே, ஓஷோ, தாகூர், பாரதி என நம்முன் விரிந்து கிடக்கும் கடலின் ஒரு துளியையேனும் அவர்கள் சுவைக்கட்டும். தேசத்திற்காக அல்ல, மனிதத்திற்காக அவர்கள் சிந்தனை விரியட்டும். பெண்கள் மதிக்கப்படட்டும். மனிதன் மனிதனாய் வாழட்டும்.கருஞ்சுவர்கள் சரியட்டும்.