கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலகம் எதிர்கொண்டு போராடி வரும் கொரோனா தொற்று நோய்க்கு, உலகமயமாக்கலே ஒரு முக்கிய காரணம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகளை மூடுதல், பயணங்களுக்கும் வணிகங்களுக்கும் கட்டுப்பாடு விதித்தல் மூலமாக இந்த நோய் பரவலை தடுக்க முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன. தனிமைப்படுத்தல் தற்காலிக தீர்வாக இருப்பினும், இது நீண்ட காலம் தொடர்ந்தால் அது பொருளாதார பேரழிவை நோக்கியே நகரும். தொற்று நோய்க்கான உண்மையான தீர்வு, தனிமைப்படுத்தலில் அல்ல, ஒத்துழைத்தலில் மட்டுமே இருக்கிறது.
வரலாற்றின் பக்கங்களில், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்னரே தொற்று நோய்கள் மூலம் மனித இனம் பேரழிவை சந்தித்திருக்கிறது. விமானங்களும் பயண கப்பல்களும் இல்லாத 14-ம் நூற்றாண்டில் ப்ளேக் தொற்று நோய் கிழக்கு ஆசியாவிலிருந்து, மேற்கு ஐரோப்பாவிற்கு பரவி, கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இறந்தனர். இது ஐரோப்பிய-ஆசிய கண்டத்தின் கால் பகுதி மக்கள் தொகை. இங்கிலாந்தில் பத்தில் நான்கு பேர் இறந்தனர். ஃப்ளோரன்ஸ் நகரத்தில் மட்டும் 50,000 முதல் 1,00,000 மக்கள் வரை இறந்தனர்.
1520 மார்ச் மாதத்தில், Francisco de Eguia என்ற தனி மனிதர் வைசூரி(பெரியம்மை) நோயுடன் மெக்சிகோவில் இறங்கினார். அந்த நேரத்தில், மத்திய அமெரிக்காவில் புகைவண்டிகளோ, பேருந்துகளோ அல்லது பொதி கழுதைகளோ கூட கிடையாது. ஆனாலும், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக வைசூரி நோய் மத்திய அமெரிக்காவை பேரழிவுக்கு உள்ளாக்கியது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை இந்த தொற்று அழித்தது என்று கணிக்கப்படுகிறது.
1918-ல் ஒரு கொடிய காய்ச்சல், உலகின் தொலைதூர மூலைகளுக்கெல்லாம் சில மாதங்களுக்குள்ளாகவே அதி வேகமாக பரவியது. பல இலட்சம் மனிதர்களை – கிட்டத்தட்ட மொத்த மனித இனத்தின் கால் பங்கு மனிதர்களை – அது தாக்கியது. இந்தியாவின் மக்கள் தொகையில் 5% மக்கள் இந்த கொடிய காய்ச்சலால் மரணித்ததாக கணக்கிடப்படுகிறது. தாஹிதி தீவில் 14% மக்களும், சமோயாவில் 20% மக்களும் இறந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மொத்தத்தில் 100 மில்லியன் மக்கள், ஒரு வருடத்திற்குள்ளாகவே,இந்த கொடிய காய்ச்சலால் இறந்தனர். இது நான்கு வருடமாக நடைபெற்ற முதல் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது.
கடந்த சில நூற்றாண்டுகளில் பெருகும் மக்கள் தொகை, மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து போன்ற காரணங்களால் மனித இனம் தொற்று நோய்களால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகவும் வலு அடைந்திருக்கின்றன. தற்கால பெரு நகரங்களான டோக்கியோவோ அல்லது மெக்சிகோவோ இடைக்கால ஃப்ளோரன்ஸ் நகரத்தை விட, நோய்க்கிருமிகளுக்கான மிகப்பெரிய உற்பத்தி கூடமாக மாறி இருக்கிறது.மேலும் 1918 ஐ விட, இன்று போக்குவரத்து மிகவும் மேம்பட்டிருக்கிறது. ஒரு தொற்று நோய் வைரஸ், ஃப்ரான்ஸிலிருந்து டோக்கியோவிற்கும் மெக்சிகோவிற்கும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பரவ முடியும். இந்த சாத்தியக் கூறுகளால், உண்மையில் நாம் தினமும் புதிது புதிதான கொடிய தொற்று நோய்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனாலும், இந்த கொடிய தொற்று நோய்களின் நிகழ்வுகளும், அதன் பாதிப்புகளும் மிகவும் குறைந்து விட்டிருகின்றன. 21ம் நூற்றாண்டில் எபோலா, எய்ட்ஸ் போன்ற கொடூரமான நோய்களின் பாதிப்புகள், வரலாற்றின் எந்த காலங்களையும் விட குறைந்தே இருந்தது. இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் சிறந்த தற்காப்பு, தனிமைப்படுத்துதல் அல்ல, தகவல்படுத்துதல். இந்த நோய்க்கிருமிகளுக்கு எதிரான போரில் மனிதன் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் – கிருமிகள் கட்டற்ற மாறுதல்கள் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுகின்றன. ஆனால் நமது மருத்துவர்கள், அறிவியல் பூர்வமான தகவல் ஆய்வுகள் மூலம் இந்த நோய்க்கிருமிகளை வெல்கின்றனர்.
14-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் வைசூரி நோய் பரவிய போது, அந்த நோய்க்கான காரணமோ, தீர்வோ மனிதர்களிடம் இல்லை. மனித இனம் அறிவியல் வளர்ச்சி அடையும் வரை நோய்க்கான காரணங்களாக கடவுள்களையும், தீய சக்திகளையும், அசுத்தமான காற்றையும் மட்டுமே நம்பி கொண்டிருந்த்தனர்.நுண் கிருமிகளையோ, வைரஸ்களைப் பற்றியோ மனித இனம் அறிந்திருக்கவே இல்லை.இதனால், வைசூரி நோய் பரவிய போது, மனிதர்கள் கடவுள்களை வேண்டி கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இதுவே வைசூரி நோய் விரைவாக பரவ வழி செய்தது.
ஆனால் கடந்த நூற்றாண்டில், உலகம் முழுவதும் இருந்து மருத்துவர்களும் அறிவியலாளர்களும் தகவல் பரிமாற்றம் மற்றும் ஆய்வுகளின் மூலம் கொடிய தொற்று நோய்களுக்கான காரணங்களையும், அவை பரவும் முறைகளையும், அவற்றை நாம் எதிர்கொள்வதற்கான வழிகளையும் அறிந்து வைத்திருக்கின்றனர்.பரிணாமக் கோட்பாடு புதிய நோய்கள் உருவாகும் முறைகளையும், அவை கொடிய நோய்களாக பரிணமிக்கும் முறைகளையும் நமக்கு விளக்குகின்றன. மரபியல் மூலம் நம்மால் நோய்க்கிருமிகளின் கூறுகளை அறிந்து கொள்ள முடிகிறது.மத்திய கால மக்களால் வைசூரி நோய்க்கான காரணத்தை அறிந்து கொள்ளவே முடியாதிருந்த நிலை மாறி, இன்றைய அறிவியலாளர்கள் வெறும் இரண்டே வாரங்களில் கொரோனா வைரஸ்களின் மரபணு கூறுகளை கண்டுபிடிக்கும் நிலையை அடைந்திருக்கிறோம்.
தொற்று நோய்கள் பரவுவதற்கான காரணங்களை நமது அறிவியலாளர்கள் அறிந்து கொண்டவுடன், அவற்றை எதிர்த்து போராடுவது சுலபமாகிறது.தடுப்பூசிகள், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள், உயர்தர மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என இவை யாவும், மனித இனத்தை இந்த கொடிய நுண்ணுயிர் கிருமிகளிடம் போராட வழி செய்திருக்கின்றன.1967-ல் பெரியம்மை நோய் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்களை தாக்கியது. அதில் 2 மில்லியன் மக்கள் இறந்தனர். ஆனால் அடுத்த 10 வருடங்களில் பெரியம்மை முழுவதுமாக அழிக்கப்பட்டது. 2019 ல் ஒருவர் கூட பெரியம்மையால் பாதிக்கப்படவோ இறக்கவோ இல்லை என்பது மனித இனத்தின் பெரும் வெற்றியாக கொள்ளப்படலாம்.
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு வரலாறு நமக்கு சொல்லும் பாடம் என்ன?
முதலில், நாட்டின் எல்லைகளை மூடுவதால் மட்டுமே இந்த நோய்ப்பரவலை நம்மால் தடுக்க முடியாது. உலகமயமாக்கலும்,இரண்டு நாடுகளுக்கு மத்தியில் மேம்பட்ட போக்குவரத்தும் இல்லாத மத்திய காலங்களிலே கூட தொற்று நோய்கள் வெகு வேகமாக பரவின.1348-ல் இங்கிலாந்து அப்பொழுது வெகு வேகமாகப் பரவிய ப்ளேக் நோயைக் கட்டுப்படுத்த, தனது மொத்த மக்களையும் தனிமைப்படுத்தியது. அந்த அளவிற்கு இப்பொழுது நாம் தனிமைப்படுத்தப்பட்டால் கூட, கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. நம் மக்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்றால், நாம் காலத்தில் பின்னோக்கி கற்காலத்திற்கு செல்ல வேண்டும். இன்றைய நுகர்வு கலாசாரத்தில்,நுகர்வு பொருளாதாரத்தில் இதனை அடைவதற்கான சாத்தியம் மிக குறைவே.
இரண்டாவதாக வரலாறு நமக்கு சொல்லும் பாடம், மக்களுக்கான உண்மையான பாதுகாப்பு நம்பகத்தன்மையான அறிவியல் தகவல்களையும், உலக ஒற்றுமையையும் சார்ந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு தொற்றுநோய் பரவி பெருகினால், அதனைப் பற்றிய உண்மையான தகவல்களை, பொருளாதார தாக்கங்களை பற்றிய பயம் இல்லாமல், அந்த நாடு மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இன்றைய சூழலில், சீனாவால் உலக நாடுகளுக்கு கொரோனாவைப் பற்றிய மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தகவல் பரிமாற்றம் சர்வதேச அளவிலான நம்பகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கொரோனா வைரைஸைத் தடுக்க பல நாடுகள் எடுக்கும் தனிமைப்படுத்தல் முயற்சி வெற்றியைடைய சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.தனிமைப்படுத்தலும்,செயல் முடக்கமும் இப்போதைக்கு மிகவும் அவசியமென்றாலும், ஒவ்வொரு நாடும் தாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்று எண்ணினால், இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெரிதும் தயங்கும்.ஏனென்றால், இந்த நடவடிக்கைகள் தங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. மற்ற நாடுகள் தங்களுக்கு உதவும் என்று நம்பினால், எந்த அரசாங்கமும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்ளும். ஆனால் தங்களுக்கு சர்வதேச உதவி கிடைக்காதென்று இவர்கள் நம்பினால், தடுப்பு நடவடிக்கைகளை தைரியமாக மேற்கொள்ளாமல், பல உயிர்களின் இழப்புக்களை அமைதியாக பார்க்கவே நேரும்.
மேலும்,இது போன்ற தொற்று நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதால், ஒரு நாட்டின் பிரச்சனையாக தொடங்கி,ஒட்டுமொத்த மனித இனத்தின் பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக கொரோனா வைரஸ் காட்டு வவ்வால்களிடமிருந்து தோற்றமடைந்து, மனிதர்களின் உடல்களுக்குத் தாவுகின்றன.தொடக்கத்தில் அவை மனிதர்களின் உடல்களுக்கு தங்களைப் பொருத்திக் கொள்ள சிரமப்பட்டாலும்,கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களின் உடலுக்கேற்ப மாறுதல்கள் கொள்ள ஆரம்பிக்கின்றன.அவை அடையும் பல மாறுதல்கள் மனிதர்களுக்கு தீங்கு இழைக்கவில்லையெனினும்,ஏதெனும் ஒரு மாறுதல் மனித உடலின் தடுப்பாற்றலை மீறி மனித இனத்திற்குப் பேரழிவாய் உருவாகி மிக வேகமாக மக்களிடம் பரவுகிறது.ஒரு சூது விளையாட்டினைப் போல, ஒவ்வொரு மனித உடலும் இந்த நுண்ணுயிர்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பல மில்லியன் வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருக்கிறது. இந்த நோய்க் கிருமிகள் மனிதனை வெல்ல, இந்த மில்லியன் வாய்ப்புகளில் ஒரேயொரு வாய்ப்பு போதுமானதாக இருக்கிறது.
இது வெறும் கணிப்பு அல்ல. ரிச்சர்ட் ப்ரெஸ்டனின் “Crisis in the Red Zone” என்ற புத்தகம் எபோலா தொற்றின் போது நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியை துல்லியமாக விவரிக்கிறது. 2014ல் எபோலா வைரஸ் வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றியது.ஆரம்பத்தில் இவை மனிதர்களின் உடல்களுக்கு பழக்கப்பட்டதை விட,வவ்வால்களின் உடல்களில் வசிப்பதற்கே மிகவும் பழக்கப்பட்டிருந்தது.மேற்கு ஆப்பிரிக்காவில் மகோனா என்ற இடத்தில், ஏதோவொரு எபோலா தான் தொற்றியிருந்த மனிதனின் உடலில் மரபணு திரிபு அடைந்த போது அந்த மனித உயிரணுக்களின் கொழுப்பு கடத்தியில் தன்னை இணைத்துக் கொண்ட போது தான் இதன் ஆற்றல் பல மடங்கு பெருகி மனித இனத்திற்கு பேரழிவாக உருப்பெற்றது.இதனால்,கொழுப்பிற்கு பதில் இந்த வைரஸ் அந்த உடலெங்கும் கடத்தப்பட்டது.இவ்வாறே எபோலா தொற்று மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தது.
இதனை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், எபோலா திரிபினை ஒத்த கொரோனா திரிபு, கொரோனா பாதித்த ஒரு மனிதனின் உடலில் இரானிலோ, இத்தாலியிலோ, சீனாவிலோ நடந்து கொண்டிருக்கலாம்.அவ்வாறு கொரோனா வைரஸ் தன்னை பரிணமித்துக் கொண்டிருக்காமாயின்,அது இரானியர்களுக்கும், இத்தாலியர்களுக்கும், சீனர்களுக்கும் மட்டுமான பாதிப்பு கிடையாது.ஒட்டு மொத்த மனித இனத்திற்குமான பாதிப்பு.எனவே, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒவ்வொரு தனி மனிதனையும் காப்பது நமது கடமை.
1970-ல் வைசூரி நோயிலிருந்து மனித இனம் தன்னை காத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா மக்களுக்கும் இந்த நோய்க்கான தடுப்பூசி கொடுக்கப்பட்டதுதான்.ஏதேனும் ஒரு நாடு, இதிலிருந்து பிறழ்ந்திருந்தால், இந்த நேரம் வைசூரி நோய் மனித குலத்திற்கான பேரெதிரியாக மாறியிருக்கும்.ஏனென்றால், இந்த வைரஸ் எங்கோ ஏதேனும் ஒரு நாட்டின் மூலையில் இருந்திருந்தாலும் கூட, அது பெரும் ஆற்றலுடன் தன்னைத் தானே பரிணமித்து பரவ தொடங்கியிருக்கும்.
இந்த நுண்ணுயிர்களுக்கு எதிரான போரில், மனித இனம் எல்லைகளை காப்பது மிக அவசியம். ஆனால் அது நாட்டின் எல்லைகள் அல்ல.வைரஸ்களின் உலகத்திற்கும்,மனித உலகத்திற்குமான எல்லைகளை.இந்த உலகத்தில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உருவாகி கொண்டிருக்கின்றன.அவை தினமும் பல்வேறு மரபணு மாறுதல்களை அடைகின்றன.இந்த எல்லைக் கோடு நம் ஒவ்வொருவரின் உடலிலும் இருக்கிறது.உலகின் ஏதொவொரு மூலையில்,ஏதோ ஒரு மனிதனின் உடலில் இந்த எல்லையை ஒரு வைரஸ் மீறினால், அது உலக மக்கள் அனைவருக்குமான பேராபத்து.
கடந்த நூற்றாண்டில், முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த எல்லை பாதுகாக்கபடுகிறது.நவீன மருத்துவமும், மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களும் இதனை சாத்தியப்படுத்தி நம்மை வைரஸ்களிடமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனாலும் இந்த எல்லைகளை முழுமையாக நமது கட்டுக்குள் கொண்டு வர, நாம் தொலைதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.உலகின் பல நாடுகளில், பல இலட்சம் மக்களுக்கு அடிப்படையான மருத்துவ சேவையே இன்னும் சென்றடையவில்லை.இது நம் எல்லோரையும் பேராபத்திற்கு உள்ளாக்குகிறது.இரானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் அளிக்கப்படும் உயரிய மருத்துவ வசதி, அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் பேரழிவில் இருந்து காக்கும்.இந்த எளிய உண்மை,நம் உலகின் முக்கிய தலைவர்களுக்கு சென்றடையாதுதான் மிகப்பெரும் வேதனை.
தலைவன் இல்லாத உலகம்
இப்பொழுது மனித இனம் ஒரு கடுமையான நெருக்கடியில் இருக்கிறது.அதற்கு கொரோனா மட்டும் காரணமல்ல.மனிதர்களுக்கிடையே இருக்கும் நம்பிக்கையின்மை.ஒரு பெரும் ஆபத்தை வெல்ல மக்கள் அறிவியலாளர்களையும்,குடிமக்கள் அரசு அதிகாரிகளையும் நம்ப வேண்டும்.இரு வேறு நாடுகள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பில்லாத உலக தலைவர்கள் அறிவியிலையும்,அதிகாரிகளையும்,சர்வதேச ஒருமைப்பாட்டையும் அரசியல் காரணங்களுக்காக குறைத்து மதிப்பிடுகிறார்கள்.இதன் விளைவாக,இன்று நாம் இந்த நெருக்கடியை சர்வதேச ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் தலைவர்கள் இல்லாமல் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நெருக்கடியான சூழலில்,மிக முக்கியமான போராட்டம் மனித இனத்திற்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறது.உலக நாடுகள் ஒன்றிணையவில்லையெனில்,ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லையெனில்,அதுவே கொரோனாவின் மகத்தான வெற்றி.உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடினால்,இந்த ஒற்றுமையை சாத்தியமாக்கும் தலைவர்கள் அதிகாரம் பெற்றால் கொரோனாவையும், இனி வரும் எல்லா தொற்று நோய்களையும் நம்மால் வெல்ல முடியும்.ஏனென்றால் இது ஒரு நாட்டின் பிரச்சனை அல்ல.உலகத்தின் பிரச்சனை.மனித இனத்தின் பிரச்சனை.
Translated from In the Battle Against Coronavirus,Humanity Lacks Leadership by Yuval Noah Harari datted 15 March 2020 in Time Magazine